courtesy msn.com
ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் தொற்றால் ஏராளமானவர்கள் உயிரிழக்கின்றனர். ரேபிஸ் பற்றி மக்களுக்கு சரியான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, ரேபிஸ் நோயில் இருந்து மக்களைக் காக்க, உலக நாடுகள் முழுவதும் செப்டம்பர் மாதம் 28 – ஆம் தேதி ‘சர்வதேச ரேபிஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28. இவர் நினைவாக, 2007 – ம் ஆண்டில் இருந்து சர்வதேச ரேபிஸ் விழிப்பு உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
2030 – ம் ஆண்டுக்குள் ரேபிஸ் கிருமித்தொற்றால் ஒரு மனிதன் கூட உயிரிழக்கவில்லை என்ற இலக்கை அடையும் நோக்கில், உலக ரேபிஸ் விழிப்புஉணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இதற்காக ஒவ்வொரு தனிநபர் மற்றும் அமைப்புகளும் இந்த இலக்கை அடைய முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற மையக் கருத்தில் ரேபிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
ரேபிஸ் வைரஸ்
‘ரேபிஸ் வைரஸ்’ என்பது ரேப்டோ வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் ஆகும். ரேபிஸ் வைரஸ் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளில் வாழும் ஒட்டுண்ணியாகும். தற்போது, ரேபிஸ் வைரஸானது குதிரை, வவ்வால் போன்ற பாலூட்டிகளிலும் காணப்படுகிறது. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதனைக் கடிப்பதன் மூலம், நேரடியாக மனிதனுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே “ரேபிஸ் நோய்” மனிதனுக்குப் பரவுகிறது. இது நரம்புமண்டலத்தைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்.
ரேபிஸ் அறிகுறிகள்:
ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி மற்றும் பதற்றம் காணப்படும். மார்பு மற்றும் தொண்டைப் பகுதியில் காணப்படும் தசைகளில் நடுக்கங்கள் காணப்படும். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு ஹைட்ரோஃபோபியா எனப்படும் நீரைக் கண்டால் வெறுக்கும் தன்மை தோன்றும். மன அழுத்தம், கவனச்சிதறல், உடல் உறுப்புகள் செயல் இழப்பு மற்றும் அளவுக்கு அதிகமான எச்சில் சுரத்தல் போன்றவை ரேபிஸ் நோயின் முக்கியமான அறிகுறிகள் ஆகும். மேற்கண்ட அறிகுறிகள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட மூன்றாவது வாரத்தில் இருந்து எட்டாவது வாரத்துக்குள் தெரியவரும். சிலருக்கு இதன் காலங்களில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
ரேபிஸ் நோய் தடுப்பு முறைகள் :
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 1.5 கோடி பேர் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் ரேபிஸ் நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள்தான் ரேபிஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், வீட்டு விலங்குகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். வீட்டு விலங்குகள் குழந்தைகளைத் தாக்கினாலோ, கடித்தாலோ நமக்குத் தெரிவிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம், குழந்தைகளுக்கு ரேபிஸ் ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம்.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளுடன் கவனமாகப் பழக வேண்டும். அதன் செயல்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். இறந்த விலங்குகளில் இருந்தும் ரேபிஸ் பரவலாம் என்பதால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். வீட்டு விலங்குகளுக்கு உரிய காலத்தில் ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகள் நம்மைக் கடித்த 48 மணி நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட பின் சரியான முதலுதவியும் சிகிச்சையும் எடுக்கவில்லை என்றால் இறப்பு நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விழிப்புடன் இருப்போம் ரேபிஸில் இருந்து விடுபடுவோம்.