courtesy vikatan.com
அப்போலோ மருத்துவமனையில் 9 நாட்களாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வர் இருக்கும் தளத்தில் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது’ என்கின்றனர் அப்போலோ வட்டாரத்தில்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலையில் இருந்தே, முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகள் வேகமாக பரவின. ‘எங்கிருந்து யார் இவற்றை வெளியிடுகிறார்கள்?’ எனக் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர் காவல்துறை அதிகாரிகள். அப்போலோ மருத்துவமனை வாசலிலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஒருகட்டத்தில், ‘வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் காவல்துறை எச்சரித்தது. அதையும் மீறி வதந்திகள் உலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்தே அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் மேலும் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, முதல்வருடன் 8 நாட்களாக தங்கியிருந்த சசிகலா நேற்று மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். கார்டனில் சில வேலைகள் இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
‘முதல்வர் உடல்நலன் குறித்த வதந்தி ஏன் பரவியது?’ என கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம். “தொடர்ச்சியான மருந்துகளால் நேற்று முன்தினம் மிகவும் சிரமப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் அவரது உடல்நலனில் சற்று தொய்வு ஏற்பட்டது. கை, கால்களில் அசெளகரியம் ஏற்பட்டது. அதுவே, முதல்வர் உடல்நலன் குறித்து தவறான வதந்தியாகப் பரவிவிட்டது. முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிஃப்ட்டுக்கு மூன்று நர்சுகள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர். காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கும் தலா ஒரு நர்ஸ் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
முதல்வரின் அறைக்குள்ளேயே 24 மணி நேரமும் தங்கியிருக்கிறார் டாக்டர் சிவகுமார். முதல்வருக்கு பக்கத்து அறையில் மூன்று நர்சுகள் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்பட சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அவர்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு வருகிறார்கள். ‘முதல்வருக்கு சிகிச்சை முடியும் வரையில், யாரும் ஹாஸ்டலுக்குச் செல்ல வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதர ஸ்டாஃப் நர்சுகளுக்கு இரண்டாம் மாடிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கார்டன் திரும்புவார்” என நம்பிக்கையோடு பேசினார்.
” முதல்வரின் உடல்நலன் குறித்த ரகசிய அறிக்கையை படித்ததற்காக, மருத்துவமனையில் இருந்து இரண்டு நர்சுகள் உள்பட மருத்துவர் ஒருவரின் செயலாளர் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நேற்று காலை மருத்துவமனை நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தனர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நர்சுகள். அதில், ‘நாங்கள் செய்தது தவறுதான். இனிமேல் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். அதற்குப் பதில் அளித்த நிர்வாக அதிகாரி, ‘இனி இதுபோன்று ஒருமுறை நடந்தால், கடுமையாக நடவடிக்கை எடுப்போம். உங்களுடைய நர்ஸ் பதிவையே ரத்து செய்துவிடுவோம்’ எனச் சொல்லிவிட்டு மெமோ கொடுத்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள், மௌன விரதத்தையே கடைபிடிக்கின்றனர். ‘முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும்’ என அவர்களும் பிரார்த்திக்கின்றனர்” என விவரித்தார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
அண்மையில் திருமணம் முடித்த இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், சுவிஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்வரின் உடல்நலனை விசாரித்துவிட்டுச் சென்றுவிட்டார். ‘அம்மா விரைவில் கார்டனுக்குத் திரும்ப வேண்டும். தலைமைச் செயலக பணிகளை கவனிக்க வேண்டும்’ என்ற தொண்டர்களின் பிரார்த்தனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது!